குழந்தைகள் பழவகைகளை சாப்பிடுவது அவர்களின் உடல் நலனுக்கு உகந்தது. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பழத்துண்டுகளை நறுக்கிக் கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பழங்களில் உள்ள சத்துக்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக தாய்மார்கள், பழங்களை பயன்படுத்தி பழச்சாறு தயாரித்து வழங்குகிறார்கள்.
ஆனால் எல்லா நேரத்திலும் குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்கக் கூடாது. காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு கொடுப்பதை தவிர்த்துவிடவேண்டும். சாப்பிட்ட உடனேயும் ஜூஸ் கொடுக்கக்கூடாது. காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் ஜூஸ் கொடுக்கலாம். குறிப்பாக காலை 11 மணி மற்றும் பிற்பகல் 3 மணி அளவில் பழச்சாறு பருக வைக்கலாம். ஒரே மாதிரியான பழ ஜூஸை தினமும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
சிலவகை பழங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காது. அவை சத்தானது என்பதற்காக கட்டாயப்படுத்தி அருந்தவைக்கக்கூடாது. அவர்களுக்கு பிடித்தமான மற்ற பழங்களுடன் அவர்களுக்கு பிடிக்காத பழங்களையும் சேர்த்து பழச்சாறாக தயாரித்துக் கொடுக்கலாம். இரவு நேரங்களில் பழச்சாறு கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு பழ பழச்சாறுகளை இரவு நேரங்களில் தவிர்த்திட வேண்டும். குளிர்காலத்தில் சளித்தொல்லை, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்கக்கூடாது.
குழந்தைகளுக்கு 10 மாதத்தில் இருந்தே பழச்சாறு கொடுக்க தொடங்கலாம். நாளடைவில் பழச்சாறு கொடுப்பதை படிப்படியாக குறைத்துவிட்டு பழங்களை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்